Sunday, June 20, 2010

வானத்தின் வர்ணஜாலம்


வட்ட வட்ட முகம்தனிலே 
வாரிச் சுருட்டிய முத்துச் சிரிப்போ 
விண்மீன் கூட்டத்தின் ஒருங்கிணைப்பு !
வண்ண வண்ண உடையினிலே 
விண்ணில் உலா வருகின்றாய் !
வாங்கிக் கொடுத்தவர் யாரென்று 
வாய் திறந்து பேசாயோ ?
அனைத்தும் நிறைந்த உன்னில் தான் 
ஆதவன் வந்து திலகமிட்டான் !

பறவைகள் பறந்திடும் சாலையோ - நீ 
பகலவன் உறங்கிடும் படுக்கையோ ?
ஆதி அந்தம் கண்டிடவே 
அனுதினமும் முயன்றிட்டோம் !
அன்பர்களுக்கு உதவிடவே 
ஆதவனும் வந்தானோ ?

எட்டித் தொட முயன்றிடவே 
பட்டுப் பூச்சியாய்ப் பறக்கின்றாய் !
கரிய மேகம் கொண்டு நீயும் 
மாரியைத் தானிங்கு பொழிந்தாயோ ?
சினம் கொண்டு நீயும் தான் 
சீறிப் பாய்ந்து வந்தாலே 
சுற்றித் திரியும் எம்போன்றோர் 
சீவிக்கத் தானிங்கு இயன்றிடுமோ ?

No comments:

Post a Comment