Thursday, April 12, 2012

ஆசை முகம் மறந்து போச்சே...!

சிரித்து மயக்கி சிறகடிக்க
துரிதம் கொள்ளும் மின்மினியே!
யாதெனக் கொள்வேன் உனைநானே
யவ்வன சுந்தரன் உனைத்தானே!

மிதக்க வைக்கிறாய் மேல்வானில் - உன்னை
மிருதுவான தென்றலாய்க் கொள்ளவா?
தூண்டிச் செல்கிறாய் மனதை மெலிதாய்
கரையைத் தீண்டும் அலையெனக் கொள்ளவா?

தோன்றி மறைகிறாய் அவ்வப்பொழுது
தேய்ந்து வளரும் மதியெனக் கொள்ளவா?
பின்தொடர்கிறாய் என்றும் எப்பொழுதும்
தொடர்ந்து வரும் நிழலெனக் கொள்ளவா?

காண விதைக்கிறாய் இல்லாததை
காணல் நீரெனக் கொள்ளவா?
எட்டாக் கனியாய்த் தித்திக்கிறாய்
எளிதில் என்னை வஞ்சிக்கிறாய்!!

காத்திருக்கிறேன் காலங்காலமாய் உனைநம்பியே
காற்றில் தீட்டிய என் ஓவியங்களை
தண்ணீரில் எழுதிய என் காவியங்களை
திரட்டிப் புரட்ட ஓர்நாள் நோக்கி
ஆகாசக் கோட்டையின் வாசலிலே
ஆவலோடு ஆனந்தமாய் ஆசையாக!!!


Thursday, January 26, 2012

'புயல்'விழி 'தானே'!!??

சுட்டிச் சுழற்றும் உன் விழிச்சுழலில் சற்றே
எட்டிப் பார்க்கும் அளவிலா அழகைக்
கண்டு ரசித்த குற்றமோ??? - அண்டையில்
ஆண்டும் ஈண்டும் சிதறிக் கிடந்த
பல்லுயிர், பல்பொருள் அனைத்தும்
சில்லாய்ச் சிரிக்கின்றன சிலநொடிகள்
உன் விழிச்சிறையில்....!!!
ஒப்புகிறேன் பலருக்கு நானும்...
தப்பிப் பிழைத்த காரணத்தால்...!
கடைக்கண்ணால் அன்றோ பார்க்கிறேன்
எடைக் கணக்கின்றி ஈர்க்கும் அந்த
காந்தக் கண்களை இன்றும்....!!!