Thursday, April 12, 2012

ஆசை முகம் மறந்து போச்சே...!

சிரித்து மயக்கி சிறகடிக்க
துரிதம் கொள்ளும் மின்மினியே!
யாதெனக் கொள்வேன் உனைநானே
யவ்வன சுந்தரன் உனைத்தானே!

மிதக்க வைக்கிறாய் மேல்வானில் - உன்னை
மிருதுவான தென்றலாய்க் கொள்ளவா?
தூண்டிச் செல்கிறாய் மனதை மெலிதாய்
கரையைத் தீண்டும் அலையெனக் கொள்ளவா?

தோன்றி மறைகிறாய் அவ்வப்பொழுது
தேய்ந்து வளரும் மதியெனக் கொள்ளவா?
பின்தொடர்கிறாய் என்றும் எப்பொழுதும்
தொடர்ந்து வரும் நிழலெனக் கொள்ளவா?

காண விதைக்கிறாய் இல்லாததை
காணல் நீரெனக் கொள்ளவா?
எட்டாக் கனியாய்த் தித்திக்கிறாய்
எளிதில் என்னை வஞ்சிக்கிறாய்!!

காத்திருக்கிறேன் காலங்காலமாய் உனைநம்பியே
காற்றில் தீட்டிய என் ஓவியங்களை
தண்ணீரில் எழுதிய என் காவியங்களை
திரட்டிப் புரட்ட ஓர்நாள் நோக்கி
ஆகாசக் கோட்டையின் வாசலிலே
ஆவலோடு ஆனந்தமாய் ஆசையாக!!!