Tuesday, July 26, 2011

காதல் தோல்வி!



காண விழைந்து ஓடோடி வந்தேன்
காலணி கூட அணியாமல்!
காத்திருக்கிறாய் எனக்கோ என்று!!!

என்னைக் காண ஒருபோதும் நீ
என் இருப்பிடம் தேடி வராமலிருந்தும்
கோபமில்லை உன்மேல் எனக்கு!!!

திரண்டு வந்து மெதுவாய்
திருடிச் சென்றாய் என்மனதை
திருப்பிக் கேட்கவும் மனமில்லை எனக்கு!!!

தீண்டிச் செல்லும் ஒவ்வொரு முறையும்
துள்ளிக் குதித்தேன் குதூகலத்தில்
என்னை மட்டும் தொடர்கிறாய் என்று!!!

சுவடுகள் பதித்துத் திரும்பிப் பார்த்தேன்
சுறுசுறுப்பாய்ப் பின்தொடர்ந்தாய்!
நான் என்றால் அவ்வளவு ஆசையா உனக்கு???

உன்னில் கலந்து உவகையில் மிதக்கயில்
உணர்ந்தேன் தற்செயலாய் அப்பொழுது
ஓராயிரம் காதலர்களா உனக்கு??? 

Monday, July 25, 2011

நன்றிகள் கோடி!!!

மறக்கவும் இல்லை - எதனையும்
மறைக்கவும் இல்லை!
ஏனென்று தெரியவில்லை
என் வார்த்தைகளும் கைவசம் இல்லை!
எண்ணி எண்ணி வியக்கிறேன்
எனகென்ன நேர்ந்ததென்று!
மற்றதெல்லாம் பிதற்றும் என்வாய்
மாதா பிதா எனில் மௌனமொழி பேசுகிறது!
தவறேதும் இல்லை என்மேல்
தவிர்க்க முடியாத உண்மை இதோ!
இன்று என்னுள் எல்லாமாய் எங்கும் நீவீரிருக்க - இருக்க  
இடமின்றி வார்த்தைகள் இறந்துவிட்டன போலும்!!!
இருப்பினும் உயிர்ப்பித்திருக்கிறேன் - என்
இனிய தமிழ்த்தாயைக் கொண்டு 
இக்கவிதையை !!! - உங்களுக்காக இதோ என் 
இருபத்தைந்தாம் படைப்பு சமர்ப்பணம்!!!
அரியதொரு பிறவியில்லை எனினும்
அறிய வைத்திருக்கிறீர்கள் என்னையும்
இப்பூவுலகில் சிலருக்கு!! நன்றி!!!
இன்னல்களிலும் இன்பமென்று
இருசுவை காண வைத்தீர் - வியந்தேன்!
இன்றும் தொடருகிறேன் அப்பணியை
நிலையில்லா இவ்வாழ்வில் நீக்கமற
நிலைத்திருக்கும் நினைவுகளில்!
வேண்டி நிற்கிறேன் எப்பிறப்பினிலும்
வேறொருவர் வேண்டாமென்று!
தேவைகளற்ற உங்களுக்கு 
தேகத்தால் என்றும் சேவை செய்யக் 
காத்திருப்பேன் காலம் காலமாய்- இக்
கருத்திலொன்றும் மாற்றமில்லை!!!

Friday, July 22, 2011

திருமண மலர்கள்!

சொல்லாமல் வந்த திசையிலே
சொல்லித் தந்த வார்த்தைகளை
செவி கொடுத்துத்தான் கேட்டேனே
செல்லும் இடமெல்லாம் செல்லமாய்...

அருகிலென்றாலும் உன்னைவிட்டு
அகல என்றும் நினைத்ததில்லை....
அந்நாள் இந்நாள் என்று இன்று என்  
அகம் கூற உணர்கிறேன்...

என்னைக் காக்கும் முயற்சியில்
என்றென்றும் நீயிருக்க,
எதிர்ப்பார்ப்புகளோடு எதிர்ப்பாராவிதமாய்
எடுத்துச் செல்கிறார்கள் என்னை!

நியதி இதுவென்று நினைத்தாலும்
நியாயம் தானா சொல்லிவிடு?
நீடூழி வாழ்க என்றாலும் - உன் 
நினைவுகளின்றி வாழ்வதெங்கே??
வாடுகிறேன்!!!!