Saturday, May 28, 2011

தமிழ்த் திருட்டு!

அதிகார தோரணையில் பொற் சிலம்பும்,
அலங்கார மணிகளோடு மேகலையும்,
அளவிலா மதிப்புடைய சிந்தாமணியும்,
அடுக்கிய வண்ண வளையல்களும்,
அழகாய் அசைந்தாடும் குண்டலமும்,
அன்று அணிந்து அன்ன நடையிட்ட வீதியிலே
ஆளையே காணோம் இன்று???
அட! விலைவாசி உயர்வால் உன்னையும்
ஆட்கொண்டுவிட்டதோ கள்வர் பயம்?
அன்றி அண்டை நாட்டைப் பார்த்து
அலைகிறாயோ நீயும் கலாச்சார மாற்றத்திற்கு?
அடிக்கடி கண்டு தான் வருகிறேன் உன் போக்கை!
ஆதி முதல் அந்தம் வரையிலாக!
ஆதிக்கத்தின் ஆழம் கண்டுகொள்ளும் முயற்சியில்
அண்மையில் தந்துள்ளேன் புகார்- நகரிலே
அடக்கவேண்டி இத்தமிழ்த் திருட்டை!!!
அன்பான இளைஞர்களுக்கு ஓர் வேண்டுகோள்!
அகப்பட்டால் இதனை ஒப்படையுங்கள் 
அதன் இருப்பிடத்திற்கு! - அகந்தையால் 
அநாதையாக்கி ஒதுக்கி விடாதீர்கள் இதனை ஒருகாலும்!!!

Wednesday, May 25, 2011

புதிய பார்வை!

தொலைத்துவிட்ட வழியதுவோ 
தொங்கி அலைந்து நான் கேட்க
மறுத்து விலகிய பல்லோரிருக்க 
மனிதன் ஒருவனைக் கண்டேன் நான்!
பாதை காட்டிய பணிவுள்ளம்
பகர்ந்த மொழி ஒவ்வொன்றும்
நேரில் கண்டு நெகிழ்ந்தாற்போல் 
நேர்த்தியாய் எனக்கு தென்பட்டது! 
இருக்கும் இடம் அனைத்தையுமே 
இடைவெளி விட்டு அடியடியாய் 
அழகுடன் அதனை வருணிக்க 
ஆழ்ந்து போனேன் அதிசயத்தில்!

தற்காலிக சந்திப்பால்
தகவல் பரிமாற்றமும் நடைபெறவே,
கேட்டேன் நானும் அவரிடமே 
கவிஞரோ நீரென்று???
மறுமொழியதுவோ கூறாமலே 
மௌனச் சிரிப்பை உதிர்த்திட்டார்!
நன்றி கூறி நகைத்திட்டு
நடையைக்கட்ட முற்பட்டேன்!
ஏதோ ஒன்று எனைத் தடுக்க 
ஏனோ அவரைத் திரும்பிப் பார்த்தேன்!
அடிமேல் அடியை அளந்திட்டு 
அவ்வப்போது  தட்டிப் பார்த்து,

உணர்ந்து நகர்ந்து கடக்கயிலே 
உள்ள சாலையின் அழகை 
செவிமடுத்து தத்திச்
செல்லும் திறனுடையார்,
என்ற உண்மை விளங்கிடவே 
என் அகக்கண் அழுது புலம்பியதே!
விழியின்றி வழியவரோ கண்டு 
வீர நடையிட , நாமோ வாழ்வில் 
வெகு பல பொருட்கள் பெற்றிருந்தும்
விரைந்து உதவிட மறுக்கின்றோம்,
என்பதங்கே புலனாக- சிந்தையில் 
எட்டிய முடிவும் வென்றதங்கே!

இருக்கும் வரை முடியாதெனினும் 
இறந்த பின்னர் செய்யலாமே!
காணும் விழிகள் இரண்டினால் 
காரிருள் அழித்திடுவோம் உலகினிலே!
கண் தானம் செய்வோம் இப்பிறப்பில் 
கவின் ஞாலமதனில்
காலம் காலமாய்க் 
களிப்புடன் என்றும் வாழ்வோம்!!