Wednesday, May 25, 2011

புதிய பார்வை!

தொலைத்துவிட்ட வழியதுவோ 
தொங்கி அலைந்து நான் கேட்க
மறுத்து விலகிய பல்லோரிருக்க 
மனிதன் ஒருவனைக் கண்டேன் நான்!
பாதை காட்டிய பணிவுள்ளம்
பகர்ந்த மொழி ஒவ்வொன்றும்
நேரில் கண்டு நெகிழ்ந்தாற்போல் 
நேர்த்தியாய் எனக்கு தென்பட்டது! 
இருக்கும் இடம் அனைத்தையுமே 
இடைவெளி விட்டு அடியடியாய் 
அழகுடன் அதனை வருணிக்க 
ஆழ்ந்து போனேன் அதிசயத்தில்!

தற்காலிக சந்திப்பால்
தகவல் பரிமாற்றமும் நடைபெறவே,
கேட்டேன் நானும் அவரிடமே 
கவிஞரோ நீரென்று???
மறுமொழியதுவோ கூறாமலே 
மௌனச் சிரிப்பை உதிர்த்திட்டார்!
நன்றி கூறி நகைத்திட்டு
நடையைக்கட்ட முற்பட்டேன்!
ஏதோ ஒன்று எனைத் தடுக்க 
ஏனோ அவரைத் திரும்பிப் பார்த்தேன்!
அடிமேல் அடியை அளந்திட்டு 
அவ்வப்போது  தட்டிப் பார்த்து,

உணர்ந்து நகர்ந்து கடக்கயிலே 
உள்ள சாலையின் அழகை 
செவிமடுத்து தத்திச்
செல்லும் திறனுடையார்,
என்ற உண்மை விளங்கிடவே 
என் அகக்கண் அழுது புலம்பியதே!
விழியின்றி வழியவரோ கண்டு 
வீர நடையிட , நாமோ வாழ்வில் 
வெகு பல பொருட்கள் பெற்றிருந்தும்
விரைந்து உதவிட மறுக்கின்றோம்,
என்பதங்கே புலனாக- சிந்தையில் 
எட்டிய முடிவும் வென்றதங்கே!

இருக்கும் வரை முடியாதெனினும் 
இறந்த பின்னர் செய்யலாமே!
காணும் விழிகள் இரண்டினால் 
காரிருள் அழித்திடுவோம் உலகினிலே!
கண் தானம் செய்வோம் இப்பிறப்பில் 
கவின் ஞாலமதனில்
காலம் காலமாய்க் 
களிப்புடன் என்றும் வாழ்வோம்!!

No comments:

Post a Comment