Sunday, February 20, 2011

கனவு மெய்ப்பட வேண்டும் !

               "அம்மா! .... நாளை மறுநாள் ராணுவத்தில் சேர்வதற்கான தேர்ச்சிப் போட்டிகள் நடைபெற உள்ளன. நான் பயிற்சிக்கு சென்றுவிட்டு வருகிறேன்", என்றவாறு மெல்ல நகர்ந்தான் கார்த்திக்.
                     சிறு வயதிலிருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என்பது கார்த்திக்கிற்கு ஒரு துடிப்பாகவே இருந்தது. அதற்கான நேரம் தற்பொழுது வந்துவிட்டதால் மிகவும் நெகிழ்ந்தான். அவனுடைய ஆசைக்கோ யாரும் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அது அவனுக்கு ஒரு பக்கபலமாகவே இருந்தது.
                       இரண்டொரு நாளில் ராணுவத்தில் சேர்வதற்கான தேர்ச்சிப் போட்டிகள் நடைபெற்றன. தன்னுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறிவிட்டதன் களிப்பு கார்த்திக் முகத்தில் தாண்டவமாடியது.
அம்மாவுக்கு, பிள்ளை தன்னை விட்டு வேற்றிடம் சென்றுவிடுவானே என்ற கவலை ஒரு புறம் இருந்தாலும், தன் சுயகாலில் நிற்க அவன் அறிந்துகொண்டதனாலும், தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற அவனுடைய தொலைநோக்கு எண்ணமும், ஒருவகையில் அவளை பூரிப்பில் ஆழ்த்தியது
                         கார்த்திக் ராணுவத்தில் சேர்ந்து பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டனசிறுவயதிலிருந்தே அவனுடைய எண்ணங்களை செம்மைப்படுத்துவதிலேயே அவன் அன்னை முக்கியத்துவம் கொடுத்து வந்தாள். அவனுக்கு உலகத்தைப் பற்றி பலவகையில் எடுத்துரைத்தாள். "இந்த உலகம் முழுவதுமே இறைவனின் படைப்பு. இதில்  எந்த ஒரு பொருளுமே ஒருவருக்கே உரியது அன்று. இந்த உலகைக் காப்பது மட்டுமே நம் ஒவ்வொருவரின் கடமை", என்று அம்மா கூறிய மொழிகள் நினைவுக்கு வர, ரயிலில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தான் கார்த்திக்.
                          எந்த ஒரு செயலையுமே 'முடியும்' 'சாத்தியம்' என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கும் கார்த்திக், வாழ்க்கையில் பல தடுமாற்றங்களை சந்தித்திருக்கிறான். எனினும், தன் அன்னையின் கூற்றுகளை நினைவில் கொண்டு, எத்தனை விதமான தடங்கல்கள் வந்தாலும் அதனை எளிதில் எதிர்கொள்ளும் எண்ணம் படைத்தவனானான். அதற்கு கிடைத்த பரிசு...அவன் இன்று வகிக்கும் பதவி!
                         இன்னும் ஒரு மணி நேரம் தான்! "தம்பி! நீங்க எங்க போறீங்க?", ஒரு பயணியின் குரல் கார்த்திக்கை நோக்கிச் சென்றது. "அம்மாவைப் பார்க்க!" என்று எழுச்சிமிக்க குரலில் உரைத்தான் கார்த்திக். ஆம்! பதினைந்து வருடங்களுக்குப் பிறகு தன் அன்னையைக் காணவந்த மகிழ்ச்சி அவன் முகத்தைச் சூழ்ந்திருந்தது. ரயிலை விட்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்தான். வீட்டை அடைந்து "அம்மா...!" என்று கத்தியவாறே கதவைத் தட்ட, திறக்க முற்படும் அன்னை பிள்ளையைப் பார்த்த களிப்பிலும், பிள்ளை தன் சொந்த உழைப்பால் இத்தனை பெரிய பதவியில் தேசத்தை வழிநடத்த பாடுபடுகிறான் என்ற ஆனந்தத்திலும் மூர்ச்சையடைகிறாள்.
                        முகத்தில் நீர்த்துளிகள் முத்தமிட, "கார்த்திக்...கார்த்திக் ...." என்று கூறிக்கொண்டே திண்ணையில் படுத்திருந்த தாமரை எழுந்தாள். 'உள்ளே வந்து உறங்கு! மழை வருகிறது போலிருக்கிறது. சளி பிடித்து உடல்நிலை சரியில்லாமல் போனால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்து', என்றவாறு கணவனின் குரல். ஆம்.... அனைத்தும் கனவே!
"தாமரை இப்போது தான் கருவுற்றிருக்கிறாள்!!!"
                         இவ்வாறாக தன் பிள்ளைகளை நானிலம் போற்ற வளர்க்க வேண்டும் என்ற கருத்துக் கொண்ட தாய்மார்கள் எண்ணற்றவர்கள். தங்களுடைய எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்க அவர்கள் தொடங்கும் காலம் சீர்பெற்றது. அத்தகைய தாய்மார்களின் கனவு மெய்ப்பட வேண்டும்!                 

சறுக்கு மரம்

16, அக்டோபர், 2010
" அன்று.... சனிக்கிழமை  .. காலை 11.00 மணியளவு . அன்றைய நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் இயல்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் , அவையோரிடம் அதற்கான எதிர்ப்பார்ப்புகள் சற்று அதிகமாகவே தென்பட்டன.
                      "அனைவருக்கும் வணக்கம்! இன்றைய நிகழ்ச்சியின் முதல் படியாக பார்வையாளர்களிலிருந்து மூவரை மேடைக்கு அழைக்கிறேன். அவர்களில் ஒருவர் முதியவராகவும், இரண்டாமவர் இளமை ததும்பும் இளைஞராகவும் , மூன்றாமவர் ஒரு பள்ளி செல்லும் குழந்தையாகவும் இருத்தல் வேண்டும்.!", என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கூறிய சில நிமிடங்களில் , குழப்பம் மிகுந்த அவயோரிடமிருந்து, தேவைக்கேற்ப மூவர் வந்தனர்.
              மூவருக்கும் ஒரு தலைப்பு கொடுக்கப் பட்டது. தலைப்பு :'சறுக்கு மரம் '. ஒதுக்கப்பட்ட அவகாசத்தில் அவர்களுடைய மனத் திரைகளை விலக்கி, எண்ணங்களுக்கு வண்ணம் தீட்ட முற்பட  வேண்டும் . போட்டி துவங்கியது -

  பள்ளி செல்லும் குழந்தையின்  பதில்  :-
          சறுக்கு மரம் -'நான்  தினமும் பள்ளி முடிந்ததும் என் தோழி தீபாவுடன் சறுக்கு மரம் விளையாடுவேன். அதில் சறுக்கி விளையாட மிகவும் நன்றாக இருக்கும் .விடுமுறை நாட்களில் மாலை நேரங்களில் என் பொழுதுபோக்கு இதுவே!'

இளைஞனின் பதில்  :-
           சறுக்கு மரம் - 'சற்று  இத்தலைப்பைப் பற்றி ஆழ்ந்து சிந்தனை செய்தோமேயானால்  இதன் உள்ளர்த்தம் வெளிப்படும். சறுக்கு மரத்தில் விளையாடும் பொழுது நாம் மேலிருந்து கீழே உள்ள நிலைக்கு வருகிறோமே என்று சிறிதும் அஞ்சுவதில்லை. மேலும், ஒரு முறை தவறி விழுந்தால்  மீண்டும் அதில் ஏறி விளையாடுவதற்கு யோசிப்பதில்லை. காரணம், ஆங்கே நம் மனதில் முதலிடம் வகிப்பது நமது விளையாட வேண்டும் என்ற எண்ணமே! மற்றவை நமக்கு சற்றும் தடையாக இருப்பதில்லை.
                          இது ஒரு வகையில் நட்பின் ஆழத்தையும் வெளிப்படுத்துவதைக் காணலாம். நண்பர் கூட்டம் அதுவோ பெருகப் பெருக மகிழ்ச்சியின் பெருக்கமும் காணப்படுகிறது. நாம் அவர்களோடு  இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாம் நம் வளர்ச்சியைப் பற்றி எண்ணுவதில்லை. சுயநலம் தலைக்கேறுவதில்லை.கவலைகள் நம்மை அண்டுவதில்லை.முக்கியமாக, நாம் எந்த நிலையில் இருந்தாலும் அதனைப் பற்றி சிந்திப்பதில்லை'.

'முதியவரின் பதில்' :-
        சறுக்கு மரம் -'கலியுகமதனில் மனிதர்கள் சுயநலம் கொண்டவர்களாகவும் , நாட்டின் முன்னேற்றமதனில் சிறிதும் நாட்டம் இல்லாதவர்களாகவும் இருப்பது மிகவும் வருத்தத்தைத் தருகிறது. இக்கால அரசியல் முறைகளைப் பார்த்தோமேயானால் நம் நாடு எப்பொழுது முன்னேற்ற நிலையை அடையும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
        சறுக்கு மரத்தில் ஒரு முறை ஏறிய பின்னர் எவரும் சறுக்கி கீழே வராமல் இருப்பதில்லை.அதற்காக வருத்தமுறுவதும் இல்லை அந்தப் பயணமானது இன்பத்தைத் தரக்கூடியதாக உள்ளது.அனைவரையும் உற்சாகத்திற்கு ஆளாக்குகிறது.
         அரசியல்வாதிகள் தங்களது அரசியல் பயணத்தை சறுக்கு மரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தல் வேண்டும். மேல் நிலையை அடைந்த அரசியலாளர்கள் நாமும் ஒரு காலத்தில் கீழுருந்தவர்கள்தான் என்ற உண்மையை உணர்ந்து சக மக்களுக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சியுற வேண்டும் .அனைவரையும் அத்தகைய சேவையில் ஈடுபடுத்தி கிழ்மக்களுடைய தரத்தையும் உயர்த்தப் பார்த்திடுதல் வேண்டும்.
           இவ்வாறன்றி, மேல்நிலையை அடைந்த இவர்கள் மற்றவரின் நிலையை அறிவாரிலர் என்றால் மேல்நிலையை நோக்கிவரும் அனைவருக்கும் இவர்கள் ஒரு தடையாகவே இருப்பார்கள் என்பதை 'சறுக்கு மரம்' என்ற பதத்தின் தொகுப்பு குறிப்பால் உணர்த்துகிறது'.
           இம்முவருடைய பதில்களும் பார்வையாளர்களுக்கு வாசிக்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து அன்றைய தினத்திற்கான சிறப்பு விருந்தினர் பேசலாயினார்."இன்று இந்த மூவர் அளித்த பதில்கள் தான் மனிதனின் மூன்று பருவத்தைக் குறிக்கிறது. அதுமட்டுமின்றி, நமது மனத்தின் வளர்ச்சி நிலையையும் அது வெகு அழகாக எடுத்துரைக்கின்றது . ஒவ்வொரு சூழலையும் நாம் கொள்வது, அதனை நாம் பார்க்கும் முறையிலேயே உள்ளது.அந்தக் குழந்தையிடம் சறுக்கு மரத்தைப் பற்றி கேட்ட பொழுது அது அதனை ஒரு விளையாட்டாகவே கொண்டது, வெளிப்பட்டது.அது குழந்தைப் பருவம்.அறிவின் முதிர்ச்சியைக் காட்டும் வகையில் அதே விளையாட்டு ஒரு இளைஞனை, வாழ்க்கையின் மிக முக்கியப் பங்கு வகிக்கும் நண்பர்களை நினைவூட்டுகிறது. முதியவரின் பதிலோ, அனைத்தையும் அனுபவித்து சுயநலத்தை மறந்து நாட்டை செம்மைப்படுத்தும் நோக்கத்தை அதனோடு இணைக்கச் செய்தது. இந்த மூன்றிலும் குறிப்பிட வேண்டிய மிக முக்கியமான ஒன்று மூலப் பொருளான           'சறுக்கு மரம்' என்பதே ஆகும். அது எந்த ஒரு இடத்திலும் மாறுபடவே இல்லையே! அதேபோன்றுதான் நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சனையும் அதற்கான தீர்வும் அதனிடமே உள்ளது. அதனைக் கண்டுகொள்ள, நாம் நோக்கவேண்டிய திசை மட்டுமே வேறு! இதனை உணர்ந்து கொண்டால் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் ஒரு உல்லாசப் பயணமாகவே என்றும் தென்படும்!" என்று கூறி அமர்ந்தார்".

       இவ்வாறு நிகழ்ச்சியின் தொகுப்பு வார இதழ் ஒன்றில் வெளியாக, அதன் வாசகர் ஒருவரின் விமர்சனம்:
                        'விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டோர்'. நன்றி ஆசிரியரே! புறப்பட்டுவிட்டேன் இதோ... ஜீவா பூங்காவிலுள்ள சறுக்கு மரத்திற்கு.... மகிழ்ச்சி மலரட்டும்! ! ! :-)  
                                      

Friday, February 11, 2011

என்னுடன் வா !

வியந்தே போகிறேன் உன்னை எண்ணி 
என்னுள் அல்லவோ இருக்கிறாய் - பின் 
இயைந்து செயல்பட மறுப்பதென்ன ?
கண்ணால் காண முயலும் முன் 
பாய்ந்து அதனைப் பார்க்கின்றாய் !
பண்பட்ட மனம் அதனிடமே 
பாசாங்கினைப் பொழிகின்றாய் !

உன் வேகப் போக்கை நான் அறிவேன் 
எனினும் ஏய்க்க இயலவில்லை என்ன விந்தை?
இன்பத்தைத் தருவாயெனில்  ஆனந்தமே - அட !
துன்பமும் உடனல்லவோ தருகின்றாய் !
தன்னலம் தலைத்தூக்க உணர்கிறேன் 
என்செய்வது நான் மகானில்லையே !-
சுயநலம் எந்தன் சிறு குழந்தை !!!


திசையறியாமல் திணறும் என்மேல் 
வசைபாட முயலும் பல்வகையோரின் 
தீக்குணம் தான் தெரிந்ததன்றோ ? -பின் 
வீண் கவலையதனைச் சேர்ப்பாயேனோ என்னிடத்தே?
தடங்கல் வருமிடத்தே தடுத்திடுவாய்- அதுபோதும் 
விளி தங்கிடும் என்னிடம் தன்னாலே !- மீறி  
மாயையால் என்னை மயக்காதே !


உடன்வர அழைக்கிறேன் தினம்தினமே 
ஊசலாடுகிறாய் ஏனோ அங்குமிங்கும் ?
விலக்க என்னால் முடியாது - உன்னை
விளக்கவும் என்றும் இயலாது !
குறைத்திடுவாய் உன் வேகம்தனை 
குறை தீர்த்திடுவாய் உடனிருந்தே - என் 
நினைவலையே அலைபாயாதே நீ !!!