Sunday, February 20, 2011

கனவு மெய்ப்பட வேண்டும் !

               "அம்மா! .... நாளை மறுநாள் ராணுவத்தில் சேர்வதற்கான தேர்ச்சிப் போட்டிகள் நடைபெற உள்ளன. நான் பயிற்சிக்கு சென்றுவிட்டு வருகிறேன்", என்றவாறு மெல்ல நகர்ந்தான் கார்த்திக்.
                     சிறு வயதிலிருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என்பது கார்த்திக்கிற்கு ஒரு துடிப்பாகவே இருந்தது. அதற்கான நேரம் தற்பொழுது வந்துவிட்டதால் மிகவும் நெகிழ்ந்தான். அவனுடைய ஆசைக்கோ யாரும் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அது அவனுக்கு ஒரு பக்கபலமாகவே இருந்தது.
                       இரண்டொரு நாளில் ராணுவத்தில் சேர்வதற்கான தேர்ச்சிப் போட்டிகள் நடைபெற்றன. தன்னுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறிவிட்டதன் களிப்பு கார்த்திக் முகத்தில் தாண்டவமாடியது.
அம்மாவுக்கு, பிள்ளை தன்னை விட்டு வேற்றிடம் சென்றுவிடுவானே என்ற கவலை ஒரு புறம் இருந்தாலும், தன் சுயகாலில் நிற்க அவன் அறிந்துகொண்டதனாலும், தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற அவனுடைய தொலைநோக்கு எண்ணமும், ஒருவகையில் அவளை பூரிப்பில் ஆழ்த்தியது
                         கார்த்திக் ராணுவத்தில் சேர்ந்து பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டனசிறுவயதிலிருந்தே அவனுடைய எண்ணங்களை செம்மைப்படுத்துவதிலேயே அவன் அன்னை முக்கியத்துவம் கொடுத்து வந்தாள். அவனுக்கு உலகத்தைப் பற்றி பலவகையில் எடுத்துரைத்தாள். "இந்த உலகம் முழுவதுமே இறைவனின் படைப்பு. இதில்  எந்த ஒரு பொருளுமே ஒருவருக்கே உரியது அன்று. இந்த உலகைக் காப்பது மட்டுமே நம் ஒவ்வொருவரின் கடமை", என்று அம்மா கூறிய மொழிகள் நினைவுக்கு வர, ரயிலில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தான் கார்த்திக்.
                          எந்த ஒரு செயலையுமே 'முடியும்' 'சாத்தியம்' என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கும் கார்த்திக், வாழ்க்கையில் பல தடுமாற்றங்களை சந்தித்திருக்கிறான். எனினும், தன் அன்னையின் கூற்றுகளை நினைவில் கொண்டு, எத்தனை விதமான தடங்கல்கள் வந்தாலும் அதனை எளிதில் எதிர்கொள்ளும் எண்ணம் படைத்தவனானான். அதற்கு கிடைத்த பரிசு...அவன் இன்று வகிக்கும் பதவி!
                         இன்னும் ஒரு மணி நேரம் தான்! "தம்பி! நீங்க எங்க போறீங்க?", ஒரு பயணியின் குரல் கார்த்திக்கை நோக்கிச் சென்றது. "அம்மாவைப் பார்க்க!" என்று எழுச்சிமிக்க குரலில் உரைத்தான் கார்த்திக். ஆம்! பதினைந்து வருடங்களுக்குப் பிறகு தன் அன்னையைக் காணவந்த மகிழ்ச்சி அவன் முகத்தைச் சூழ்ந்திருந்தது. ரயிலை விட்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்தான். வீட்டை அடைந்து "அம்மா...!" என்று கத்தியவாறே கதவைத் தட்ட, திறக்க முற்படும் அன்னை பிள்ளையைப் பார்த்த களிப்பிலும், பிள்ளை தன் சொந்த உழைப்பால் இத்தனை பெரிய பதவியில் தேசத்தை வழிநடத்த பாடுபடுகிறான் என்ற ஆனந்தத்திலும் மூர்ச்சையடைகிறாள்.
                        முகத்தில் நீர்த்துளிகள் முத்தமிட, "கார்த்திக்...கார்த்திக் ...." என்று கூறிக்கொண்டே திண்ணையில் படுத்திருந்த தாமரை எழுந்தாள். 'உள்ளே வந்து உறங்கு! மழை வருகிறது போலிருக்கிறது. சளி பிடித்து உடல்நிலை சரியில்லாமல் போனால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்து', என்றவாறு கணவனின் குரல். ஆம்.... அனைத்தும் கனவே!
"தாமரை இப்போது தான் கருவுற்றிருக்கிறாள்!!!"
                         இவ்வாறாக தன் பிள்ளைகளை நானிலம் போற்ற வளர்க்க வேண்டும் என்ற கருத்துக் கொண்ட தாய்மார்கள் எண்ணற்றவர்கள். தங்களுடைய எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்க அவர்கள் தொடங்கும் காலம் சீர்பெற்றது. அத்தகைய தாய்மார்களின் கனவு மெய்ப்பட வேண்டும்!                 

No comments:

Post a Comment