Friday, February 11, 2011

என்னுடன் வா !

வியந்தே போகிறேன் உன்னை எண்ணி 
என்னுள் அல்லவோ இருக்கிறாய் - பின் 
இயைந்து செயல்பட மறுப்பதென்ன ?
கண்ணால் காண முயலும் முன் 
பாய்ந்து அதனைப் பார்க்கின்றாய் !
பண்பட்ட மனம் அதனிடமே 
பாசாங்கினைப் பொழிகின்றாய் !

உன் வேகப் போக்கை நான் அறிவேன் 
எனினும் ஏய்க்க இயலவில்லை என்ன விந்தை?
இன்பத்தைத் தருவாயெனில்  ஆனந்தமே - அட !
துன்பமும் உடனல்லவோ தருகின்றாய் !
தன்னலம் தலைத்தூக்க உணர்கிறேன் 
என்செய்வது நான் மகானில்லையே !-
சுயநலம் எந்தன் சிறு குழந்தை !!!


திசையறியாமல் திணறும் என்மேல் 
வசைபாட முயலும் பல்வகையோரின் 
தீக்குணம் தான் தெரிந்ததன்றோ ? -பின் 
வீண் கவலையதனைச் சேர்ப்பாயேனோ என்னிடத்தே?
தடங்கல் வருமிடத்தே தடுத்திடுவாய்- அதுபோதும் 
விளி தங்கிடும் என்னிடம் தன்னாலே !- மீறி  
மாயையால் என்னை மயக்காதே !


உடன்வர அழைக்கிறேன் தினம்தினமே 
ஊசலாடுகிறாய் ஏனோ அங்குமிங்கும் ?
விலக்க என்னால் முடியாது - உன்னை
விளக்கவும் என்றும் இயலாது !
குறைத்திடுவாய் உன் வேகம்தனை 
குறை தீர்த்திடுவாய் உடனிருந்தே - என் 
நினைவலையே அலைபாயாதே நீ !!!

No comments:

Post a Comment