Sunday, February 20, 2011

சறுக்கு மரம்

16, அக்டோபர், 2010
" அன்று.... சனிக்கிழமை  .. காலை 11.00 மணியளவு . அன்றைய நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் இயல்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் , அவையோரிடம் அதற்கான எதிர்ப்பார்ப்புகள் சற்று அதிகமாகவே தென்பட்டன.
                      "அனைவருக்கும் வணக்கம்! இன்றைய நிகழ்ச்சியின் முதல் படியாக பார்வையாளர்களிலிருந்து மூவரை மேடைக்கு அழைக்கிறேன். அவர்களில் ஒருவர் முதியவராகவும், இரண்டாமவர் இளமை ததும்பும் இளைஞராகவும் , மூன்றாமவர் ஒரு பள்ளி செல்லும் குழந்தையாகவும் இருத்தல் வேண்டும்.!", என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கூறிய சில நிமிடங்களில் , குழப்பம் மிகுந்த அவயோரிடமிருந்து, தேவைக்கேற்ப மூவர் வந்தனர்.
              மூவருக்கும் ஒரு தலைப்பு கொடுக்கப் பட்டது. தலைப்பு :'சறுக்கு மரம் '. ஒதுக்கப்பட்ட அவகாசத்தில் அவர்களுடைய மனத் திரைகளை விலக்கி, எண்ணங்களுக்கு வண்ணம் தீட்ட முற்பட  வேண்டும் . போட்டி துவங்கியது -

  பள்ளி செல்லும் குழந்தையின்  பதில்  :-
          சறுக்கு மரம் -'நான்  தினமும் பள்ளி முடிந்ததும் என் தோழி தீபாவுடன் சறுக்கு மரம் விளையாடுவேன். அதில் சறுக்கி விளையாட மிகவும் நன்றாக இருக்கும் .விடுமுறை நாட்களில் மாலை நேரங்களில் என் பொழுதுபோக்கு இதுவே!'

இளைஞனின் பதில்  :-
           சறுக்கு மரம் - 'சற்று  இத்தலைப்பைப் பற்றி ஆழ்ந்து சிந்தனை செய்தோமேயானால்  இதன் உள்ளர்த்தம் வெளிப்படும். சறுக்கு மரத்தில் விளையாடும் பொழுது நாம் மேலிருந்து கீழே உள்ள நிலைக்கு வருகிறோமே என்று சிறிதும் அஞ்சுவதில்லை. மேலும், ஒரு முறை தவறி விழுந்தால்  மீண்டும் அதில் ஏறி விளையாடுவதற்கு யோசிப்பதில்லை. காரணம், ஆங்கே நம் மனதில் முதலிடம் வகிப்பது நமது விளையாட வேண்டும் என்ற எண்ணமே! மற்றவை நமக்கு சற்றும் தடையாக இருப்பதில்லை.
                          இது ஒரு வகையில் நட்பின் ஆழத்தையும் வெளிப்படுத்துவதைக் காணலாம். நண்பர் கூட்டம் அதுவோ பெருகப் பெருக மகிழ்ச்சியின் பெருக்கமும் காணப்படுகிறது. நாம் அவர்களோடு  இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாம் நம் வளர்ச்சியைப் பற்றி எண்ணுவதில்லை. சுயநலம் தலைக்கேறுவதில்லை.கவலைகள் நம்மை அண்டுவதில்லை.முக்கியமாக, நாம் எந்த நிலையில் இருந்தாலும் அதனைப் பற்றி சிந்திப்பதில்லை'.

'முதியவரின் பதில்' :-
        சறுக்கு மரம் -'கலியுகமதனில் மனிதர்கள் சுயநலம் கொண்டவர்களாகவும் , நாட்டின் முன்னேற்றமதனில் சிறிதும் நாட்டம் இல்லாதவர்களாகவும் இருப்பது மிகவும் வருத்தத்தைத் தருகிறது. இக்கால அரசியல் முறைகளைப் பார்த்தோமேயானால் நம் நாடு எப்பொழுது முன்னேற்ற நிலையை அடையும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
        சறுக்கு மரத்தில் ஒரு முறை ஏறிய பின்னர் எவரும் சறுக்கி கீழே வராமல் இருப்பதில்லை.அதற்காக வருத்தமுறுவதும் இல்லை அந்தப் பயணமானது இன்பத்தைத் தரக்கூடியதாக உள்ளது.அனைவரையும் உற்சாகத்திற்கு ஆளாக்குகிறது.
         அரசியல்வாதிகள் தங்களது அரசியல் பயணத்தை சறுக்கு மரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தல் வேண்டும். மேல் நிலையை அடைந்த அரசியலாளர்கள் நாமும் ஒரு காலத்தில் கீழுருந்தவர்கள்தான் என்ற உண்மையை உணர்ந்து சக மக்களுக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சியுற வேண்டும் .அனைவரையும் அத்தகைய சேவையில் ஈடுபடுத்தி கிழ்மக்களுடைய தரத்தையும் உயர்த்தப் பார்த்திடுதல் வேண்டும்.
           இவ்வாறன்றி, மேல்நிலையை அடைந்த இவர்கள் மற்றவரின் நிலையை அறிவாரிலர் என்றால் மேல்நிலையை நோக்கிவரும் அனைவருக்கும் இவர்கள் ஒரு தடையாகவே இருப்பார்கள் என்பதை 'சறுக்கு மரம்' என்ற பதத்தின் தொகுப்பு குறிப்பால் உணர்த்துகிறது'.
           இம்முவருடைய பதில்களும் பார்வையாளர்களுக்கு வாசிக்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து அன்றைய தினத்திற்கான சிறப்பு விருந்தினர் பேசலாயினார்."இன்று இந்த மூவர் அளித்த பதில்கள் தான் மனிதனின் மூன்று பருவத்தைக் குறிக்கிறது. அதுமட்டுமின்றி, நமது மனத்தின் வளர்ச்சி நிலையையும் அது வெகு அழகாக எடுத்துரைக்கின்றது . ஒவ்வொரு சூழலையும் நாம் கொள்வது, அதனை நாம் பார்க்கும் முறையிலேயே உள்ளது.அந்தக் குழந்தையிடம் சறுக்கு மரத்தைப் பற்றி கேட்ட பொழுது அது அதனை ஒரு விளையாட்டாகவே கொண்டது, வெளிப்பட்டது.அது குழந்தைப் பருவம்.அறிவின் முதிர்ச்சியைக் காட்டும் வகையில் அதே விளையாட்டு ஒரு இளைஞனை, வாழ்க்கையின் மிக முக்கியப் பங்கு வகிக்கும் நண்பர்களை நினைவூட்டுகிறது. முதியவரின் பதிலோ, அனைத்தையும் அனுபவித்து சுயநலத்தை மறந்து நாட்டை செம்மைப்படுத்தும் நோக்கத்தை அதனோடு இணைக்கச் செய்தது. இந்த மூன்றிலும் குறிப்பிட வேண்டிய மிக முக்கியமான ஒன்று மூலப் பொருளான           'சறுக்கு மரம்' என்பதே ஆகும். அது எந்த ஒரு இடத்திலும் மாறுபடவே இல்லையே! அதேபோன்றுதான் நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சனையும் அதற்கான தீர்வும் அதனிடமே உள்ளது. அதனைக் கண்டுகொள்ள, நாம் நோக்கவேண்டிய திசை மட்டுமே வேறு! இதனை உணர்ந்து கொண்டால் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் ஒரு உல்லாசப் பயணமாகவே என்றும் தென்படும்!" என்று கூறி அமர்ந்தார்".

       இவ்வாறு நிகழ்ச்சியின் தொகுப்பு வார இதழ் ஒன்றில் வெளியாக, அதன் வாசகர் ஒருவரின் விமர்சனம்:
                        'விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டோர்'. நன்றி ஆசிரியரே! புறப்பட்டுவிட்டேன் இதோ... ஜீவா பூங்காவிலுள்ள சறுக்கு மரத்திற்கு.... மகிழ்ச்சி மலரட்டும்! ! ! :-)  
                                      

No comments:

Post a Comment