Friday, November 12, 2010

பிரிவு

வட்டமிட்டுச் சுழன்று வந்தேன் தினம்தினமே 
வாட்டம் காணவோ நினைப்பில்லையே !
வருங்காலம் அதுவோ நன்கறிந்தால் 
வென்றிருப்பேன் அதனை மதியாலே !


பார்க்கத் துடித்த இமைகளுக்கோ 
பதிலைத்  தேடி அலைந்திடவே 
பிரிவின் குரல் பரிவோடு 
பாய்ந்ததங்கே பாற்கடல் போலே !


தனிமை அதுவோ விரட்டிடவே 
தவிப்பில் தத்தளித்த மனமதுவோ
தேடியதங்கே உறவைத்தான் 
தேக்கமுற்ற நினைவுகளில் !


பாசப் பிணைப்பை உணர்த்தியதே 
பிரிந்த நொடி ஒவ்வொன்றும் 
பார்வை பட்ட மறு நொடியே 
பாரை வென்ற உணர்வதுவோ 


சொல்லில் வெளிப்பட மறுத்திடுமோர்
சொல்வதற்கறியா இன்பமதே !
சொர்க்கம் அதுவோ உண்டென்றால் 
இதுதான் அதன் மறுபெயரோ ?

நிரந்தரம் என்று ஒன்றில்லையே 
நித்தமும் காலம் மாறுவதால் !
நீக்கமற எங்கும் என்றும்தான் 
நினைவுகள் நிரம்ப வருகையிலே 

பிரியும் தருணம் எம்முறையும்
பற்றுதல் அதனைப் பெருக்கிடுதே   
உணர்ந்து என்றும் செயல்பட்டால்
உறவுகள் அதுவோ மேம்படுமே !!

No comments:

Post a Comment