Saturday, September 3, 2011

பாரியோ நீ மாரியே....!

முதல் துளி விழுந்ததும்
மூலை முடுக்குகளில் சிலர்...
மேலும் தொடர்கிறாய் விடாமல்
மல்கிய குரலோடு உன் அழுகையை...
ஊர்வலம் போகிறது ஆங்கே
உன்னை எதிர்த்து கறுப்புக் கொடி ஏந்தி!
யாருடைய ஆறுதலுக்காக
யாசித்து நிற்கிறாய் என்று புரியவில்லை!

காற்றும் மேகமும் உறுதுணையாய்க்
காவந்து செய்து உன் துயர் நீக்கப் பாடுபட,
நீட்டிக்கிறாய் உன் பிடிவாதத்தை...
நீயும் மனிதனைப் போல் தானோ?
உன் கண்ணீரில் காலம் காலமாய்
உல்லாசமாய் உள்ளம் நனைக்கும்
வேண்டாத உறவுக்கும், தேறாத அன்புக்கும்
தேடித் தேடி அலைகிறாய் ஏனோ?


Tuesday, July 26, 2011

காதல் தோல்வி!



காண விழைந்து ஓடோடி வந்தேன்
காலணி கூட அணியாமல்!
காத்திருக்கிறாய் எனக்கோ என்று!!!

என்னைக் காண ஒருபோதும் நீ
என் இருப்பிடம் தேடி வராமலிருந்தும்
கோபமில்லை உன்மேல் எனக்கு!!!

திரண்டு வந்து மெதுவாய்
திருடிச் சென்றாய் என்மனதை
திருப்பிக் கேட்கவும் மனமில்லை எனக்கு!!!

தீண்டிச் செல்லும் ஒவ்வொரு முறையும்
துள்ளிக் குதித்தேன் குதூகலத்தில்
என்னை மட்டும் தொடர்கிறாய் என்று!!!

சுவடுகள் பதித்துத் திரும்பிப் பார்த்தேன்
சுறுசுறுப்பாய்ப் பின்தொடர்ந்தாய்!
நான் என்றால் அவ்வளவு ஆசையா உனக்கு???

உன்னில் கலந்து உவகையில் மிதக்கயில்
உணர்ந்தேன் தற்செயலாய் அப்பொழுது
ஓராயிரம் காதலர்களா உனக்கு???