Monday, June 13, 2011

அந்த என் நாட்கள்...

கண்ணயர்ந்து சாய்கிறேன் - இன்று  
கடும்பணியின் பிடிப்பின் இடையில்!
எதற்காக இவ்வாறு.......???????
எனக்குள் எழுந்த கேள்விக்கு 
ஒரு பொருட் பன்மொழியாய் 
ஓராயிரம் வார்த்தைகள்!!!
திரும்பிப் பார்க்கிறேன் இப்போது
திரும்பத் திரும்பப் பார்க்கிறேன்...
சிட்டாய்த் திரிந்து, சிரித்து மகிழ்ந்த நாட்கள் என 
சுட்டுகிறது என் கைவிரல் அவற்றை!
சுமைகள் இவை, சுவைகள் இவை என
சூட்சமமாய்க் காலம் காட்டி எதிர் நிற்க 
நினைவு கூர்ந்து நகைக்கிறேன் - ஒரு கணம் 
நில்லாமல் ஓடிய அந்நாட்களை!!!
அதெல்லாம் ஒரு காலம் - என்று
அகத்தால் உரைக்க இதோ, என் முன்னரும்
அரியவகை அனுபவங்கள் அணிவகுப்பில்!!!
ஆழ்ந்த பெருமூச்சுடன் ............
ஒட்டிப் பார்க்க முயல்கிறேன் 
ஓட்டம் பிடித்த "அந்த என் நாட்களை" !!! 


Saturday, May 28, 2011

தமிழ்த் திருட்டு!

அதிகார தோரணையில் பொற் சிலம்பும்,
அலங்கார மணிகளோடு மேகலையும்,
அளவிலா மதிப்புடைய சிந்தாமணியும்,
அடுக்கிய வண்ண வளையல்களும்,
அழகாய் அசைந்தாடும் குண்டலமும்,
அன்று அணிந்து அன்ன நடையிட்ட வீதியிலே
ஆளையே காணோம் இன்று???
அட! விலைவாசி உயர்வால் உன்னையும்
ஆட்கொண்டுவிட்டதோ கள்வர் பயம்?
அன்றி அண்டை நாட்டைப் பார்த்து
அலைகிறாயோ நீயும் கலாச்சார மாற்றத்திற்கு?
அடிக்கடி கண்டு தான் வருகிறேன் உன் போக்கை!
ஆதி முதல் அந்தம் வரையிலாக!
ஆதிக்கத்தின் ஆழம் கண்டுகொள்ளும் முயற்சியில்
அண்மையில் தந்துள்ளேன் புகார்- நகரிலே
அடக்கவேண்டி இத்தமிழ்த் திருட்டை!!!
அன்பான இளைஞர்களுக்கு ஓர் வேண்டுகோள்!
அகப்பட்டால் இதனை ஒப்படையுங்கள் 
அதன் இருப்பிடத்திற்கு! - அகந்தையால் 
அநாதையாக்கி ஒதுக்கி விடாதீர்கள் இதனை ஒருகாலும்!!!